Wednesday 20 July 2011

நிஜ சம்பவம் : சோதனைகளைக் கடந்து சாதித்துக் காட்டிய ஒரு மனிதனின் சரித்திரம்



               சுமார் ஆறு வருடங்களுக்கு முன், தினமலரில் வெளியான கட்டுரை இது. ஒரு சாதாரண மனிதன் , தன்னுடைய விடா முயற்சி , கடின உழைப்பு மூலம் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது இதை வாசிக்கும்போது நீங்கள் உணர முடியும். 

              நீங்களும் தெரிந்து கொள்ள உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கட்டுரை , உங்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமையும்.    

மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி. பாலன் !  


               திருச்செந்தூரில் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து வளர்ந்த அந்த இளைஞனுக்கு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அடிமை மனப்பான்மை கொண்ட பரம்பரைத் தொழிலை செய்ய விரும்பாமல் பெற்றோருக்கும் தெரியாமல் வெறுங்கையுடன் சென்னைக்கு ஓடிவந்தான்.
   எழும்பூரில் பிச்சைக்காரருடன் படுத்த படுக்கையாக கிடந்த அவனை  பிடித்த போலீஸ் பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ள விரட்டியது. போலீசாரிடம் சிக்காமல் தப்பியோடிய அந்த இளைஞன் அண்ணாசாலையில் அந்த நள்ளிரவில் ஏராளமானவர்கள் வரிசையாக நின்ற பிளாட்பாரம் ஒன்றில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கொண்டான்.

அசதியில் தூங்கிவிட்ட அவனை காலையில் தட்டியெழுப்பிய ஒருவர் தம்பி இந்த இடத்தை எனக்குக் கொடு இரண்டு ரூபாய் தருகிறேன் என்றார். அந்த இரண்டு ரூபாய் வருமானத்தில் அவனுடைய பசி அடங்கியது.
அவர் ஏன் இரண்டு ரூபாய் கொடுத்தார் அதற்குக் காரணம் இருந்தது. பாதுகாப்பு தேடி ஓடிவந்த தனக்கு அடைக்கலம் தந்த இடம் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக உள்ள நடைபாதை என்பதை அவன் விசாரித்து அறிந்து கொண்டான். இரவில் அங்கு அமர்ந்து கொள்வது ஆதரவற்ற தனக்கு பாதுகாப்பு மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய தொழில் வாய்ப்பும் கூட என்பதை அறிந்து கொண்டான். விரட்டிய போலீஸ்காரனை அவன் மனம் வாழ்த்தியது.

ஒவ்வொரு இரவிலும் அந்த நடைபாதையில் ஒரு துண்டையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ போட்டு வைத்து தனது வருமானத்தை முதலில் 10 ரூபாய் பின் 20 ரூபாய் என்று பெருக்கிக் கொண்டான். நாளாக நாளாக அந்தத் தூதரகத்திற்கு வரும் பயண முகவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட அவனுக்கு விசா, விமான டிக்கட் போன்ற அனைத்து விஷயங்களும்  அத்துப்படியாகிவிட்டன.

அமெரிக்கத் தூதரகத்தின் வீசாவுக்கு தவம் கிடப்போருக்கு இந்த இளைஞன் தேவதூதன் போல காட்சியளித்தான். சுறுசுறுப்பு சுமைகளை சுமக்கத் தயங்காத பண்புகளால் அவனுடைய வாடிக்கையாளர் பெருகிச் சென்றனர்.
அந்த இளைஞனின் வாடிக்கையாளரைப் பார்த்த முகவர்கள் இலட்சம் ரூபாயை  கடன் கொடுக்க முன் வந்தனர். 1986 மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த அந்த இளைஞன் தற்போது ஆண்டுக்கு 12 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் தொழில் அதிபர். ஏராளமான இளைஞர்களையும் கலைஞர்களையும் ஊக்குவித்து வரும் அந்த இளைஞன் வீ.கே.டி.பாலனின் உண்மை வாழ்க்கை வரலாறு இது.

சந்தேகக் கேசில் பிடித்து பொய் வழக்கு போட விரட்டிய போலீஸ்காரன் தன்னை சரியான இடத்திற்குத்தான் விரட்டியுள்ளான். அவனைத்தான் தேடித்திரிகிறேன் பாராட்டுவதற்கு என்று கூறுகிறார் பாலன்.
கடின உழைப்பை நம்புகிறவர்களுக்கு பிளாட்பாரத்தில் மட்டுமல்ல குப்பையிலும் கூட மாணிக்கக் கற்களை கண்டு பிடிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் கடின உழைப்பை வெறுப்பவர்கள் தமது மூதாதையர்கள் தேடிச் சேர்த்த மாணிக்கக் கற்களைக்கூட சில ஆண்டுகளில் குப்பையாக மாற்றி விடுவார்கள்.

வெற்றியை விரும்புகிற எவரும் தன்னை அதற்கு தகுதி உள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். வெற்றிக்கான தகுதிகளில் முதன்மையான ஒன்று ஈடுபாடு மிக்க கடின உழைப்பு. மதுரா டிராவல்ஸ் பாலன் கதை இதற்கு இன்னொரு உதாரணம்.

Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_28.html#ixzz1SdxoJpZR

No comments:

Post a Comment